Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பொன்னமராவதியில் வன்முறை: 50 கிராமங்களில் 144 தடை உத்தரவு

ஏப்ரல் 20, 2019 06:27

பொன்னமராவதி: தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் செல்வராஜ் மற்றும் அவரது சமூகம் தொடர்பாக 2 பேர் அவதூறாக பேசிய ஆடியோ பதிவு ஒன்று கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதை கண்டித்தும் அதில் பேசிய இருவரையும் கைது செய்தால்தான் தங்கள் ஊரில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்து செல்ல அனுமதிப்போம் எனக் கூறியும் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூர் ஊராட்சிக்குட்பட்ட கருப்பு குடிப்பட்டி கிராமமக்கள் நேற்று முன்தினம் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இது குறித்துநடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் உறுதி அளித்து வாக்குப்பதிவு எந்திரங்களை அங்கிருந்து எடுத்து சென்றனர். அதன்பிறகு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கருப்புக்குடிப்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமமக்கள் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தை நேற்று முன் தினம் இரவு முற்றுகையிட்டனர். 

பின்னர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். உடனே கைது நடவடிக்கை மேற்கொள்வதாக புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. செல்வராஜ் சம்பவ இடத்திற்கு சென்று உறுதி அளித்ததையடுத்து நள்ளிரவில் மறியல் கைவிடப்பட்டது. 

இந்தநிலையில் மீண்டும் அதே கோரிக்கையை வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தை நேற்று மீண்டும் முற்றுகையிட்டனர். பொன்னமராவதி பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். இச்சம்பவத்தில் 3 போலீசார் மற்றும் 10க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. 

பொன்னமராவதி அருகே சித்தூர், மீனாட்சிபுரம், குழிபிறைப்பட்டி, வீரணாம்பட்டி, பனையப்பட்டி, தேனிமலை, நமண சமுத்திரம் உள்பட மொத்தம் 50 இடங்களில் மரங்களை வெட்டி சாலையின் குறுக்கே போட்டு மறியலில் ஈடுபட்டனர். வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் போலீசாரின் பேச்சுவார்த்தையை ஏற்று சில இடங்களில் போராட்டம் கைவிடப்பட்டாலும் சில இடங்களில் போராட்டம் தொடர்ந்தது. 

இதனால் பொன்னமராவதி செல்லும் அனைத்து வழித்தடங்களிலும் போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டது. அந்த பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவியதால் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் கலெக்டர் உமா மகேஸ்வரி, ஐ.ஜி.வரதராஜூ, டி.ஐ.ஜி.க்கள் லலிதா லட்சுமி (திருச்சி), லோகநாதன் (புதுக்கோட்டை), மாவட்ட எஸ்.பி.க்கள் செல்வராஜ், ஜியாஉல்ஹக் உள்ளிட்டோர் நேற்று மாலை ஆலோசனை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து இலுப்பூர் கோட்டாட்சியர் சிவதாஸ், 144 தடை உத்தரவு பிறப்பித்தார். 

அதில், ஏப்ரல்19-ந்தேதி முதல் 21-ந்தேதி இரவு 12 மணி வரை பொன்னமராவதி தாலுகாவுக்குட்பட்ட 49 கிராமங்களில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 2500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளியூர்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பொன்னமராவதி தாலுகாவுக்குட்பட்ட கிராமங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இதற்கிடையே கலவரம் தொடர்பாக பொன்னமராவதி தாசில்தார் பாலகிருஷ்ணன், பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத 1000 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மேலும் வாட்ஸ் அப்பில் அவதூறு கருத்துகளை வெளியிட்ட நபர்கள் யாரென்று சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவதூறு பரப்பியவர்கள் தஞ்சை பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்பதால் அங்கு தனிப்படை போலீசார் சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

புதுக்கோட்டையிலும் பஸ்கள் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதுபோல ஆலங்குடியிலும் பஸ் போக்குவரத்து முழுமையாக முடங்கியது. இன்று காலை 8 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களுக்கு மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. 

144 தடை உத்தரவால் மாவட்டத்திற்குட்பட்ட ஆலங்குடியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை மூடப்பட்டது. இதனால் பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓட்டு போடுவதற்காக வெளியூர்களில் இருந்து ஆலங்குடி பகுதிக்கு வந்திருந்த பொது மக்கள் மீண்டும் ஊர் திரும்ப முடியாததால் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். 

மேலும் ஆலங்குடி பணிமனையில் இருந்து பட்டுக்கோட்டை, தஞ்சை, பேராவூரணி, சிவகங்கை, திருச்சி மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு டவுன் பஸ்கள் இயங்காததால் பொதுமக்கள் சிரமமடைந்தனர். இன்று இரவுக்குள் பஸ்களை இயக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபட போவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி கூறுகையில், பொன்னமராவதி பகுதியில் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தாலோ, அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே நேற்றிரவு பொன்னமராவதி கட்டியா வயலில் 3 அரசு பஸ்கள் மற்றும் ஒரு லாரியின் கண்ணாடிகளை மர்மநபர்கள் அடித்து நொறுக்கினர்.

தலைப்புச்செய்திகள்