Sunday, 29th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தஞ்சை சரக கொரோனா கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை ஐ.ஜி. லோகநாதன் மயிலாடுதுறையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் ஆய்வு. பொதுமக்கள் இந்த ஊரடங்கின் முக்கியத்துவத்தை உணர்ந்து மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுகோள் விடுத்தார்:-
தஞ்சை சரகத்துக்கு கொரோனா கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள, காவல்துறை ஐ.ஜி. லோகநாதன் மயிலாடுதுறையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் லலிதா மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் அவர் கலந்தாய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மயிலாடுதுறையில் கொரோனா தொடர்பாக ஆய்வு மேற்கொண்டேன். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. 10-ஆம் தேதியில் இருந்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள் மக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால், அரசின் விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணித்து, தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த இந்த குழுக்களின் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இன்றைய கூட்டத்தில் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
பொதுமக்கள் இந்த ஊரடங்கின் முக்கியத்துவத்தை உணர்ந்து மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். இந்தக் கூட்டத்தில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் மகேந்திரன், பொது சுகாதார துணை இயக்குனர் டாக்டர் பிரகாஷ், வட்டார மருத்துவ அலுவலர் சரத்சந்தர், மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கண்காணிப்பு மருத்துவ அலுவலர் பரத்குமார், மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் சுப்பையா மற்றும் முக்கிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.