![](admin/uploads/.5e91e5d1d8e090.23086105.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
வாஷிங்டன்: இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலையில், கடந்த மாத இறுதியில் பிரதமர் மோடியை அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். கொரோனாவை இரு நாடுகளும் ஒன்றாக எதிர்ப்போம் என்றும் கூறினாா்.
அதைத்தொடர்ந்து, அமெரிக்காவில் இருந்து நிதிஉதவியும், மருத்துவ உபகரணங்களும் குவியத் தொடங்கின. தினமும் அமெரிக்க சரக்கு விமானங்களில் மருத்துவ உபகரணங்கள் வருவது தொடர்கதையாகி விட்டது.
அமெரிக்க அரசு மட்டுமின்றி, அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள், அமெரிக்க இந்தியர்கள் என பலதரப்பினரும் போட்டிபோட்டு உதவி வருகிறார்கள். இப்படி அமெரிக்காவில் பலதரப்பினரிடம் இருந்து வந்த நிதிஉதவி 50 கோடி டாலரை (ரூ.3 ஆயிரத்து 750 கோடி) தொட்டுள்ளது. இதில், அமெரிக்க அரசு உறுதி அளித்த 10 கோடி டாலரும் அடங்கும்.
அமெரிக்க மருந்து நிறுவனமான ‘பைசர்’ 7 கோடி டாலர் அளித்துள்ளது. போயிங், மாஸ்டர்கார்டு நிறுவனங்கள் தலா 1 கோடி டாலரும், கூகுள் நிறுவனம் 1 கோடியே 80 லட்சம் டாலரும் வழங்கி உள்ளன. அமெரிக்க முன்னணி நிறுவனங்கள் அடங்கிய குளோபல் டாஸ்க் போர்ஸ் 3 கோடி டாலர் வழங்குவதாக தெரிவித்துள்ளது. வால்மார்ட் நிறுவனம் 20 லட்சம் டாலா் தருவதாக கூறியுள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த அமெரிக்கவாழ் இந்தியர்கள் நேற்று முன்தினம் நிதி திரட்டும் நிகழ்ச்சி நடத்தினர். அதில் சில மணி நேரங்களில் 15 லட்சம் டாலர் சேர்ந்தது. அமெரிக்காவில் இருந்து நிதிஉதவி குவிவதற்கு அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண்ஜித்சிங் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இம்மாத இறுதிக்குள் நிதி உதவி 100 கோடி டாலரை எட்டும் என்று முகேஷ் அகி என்ற அமெரிக்க இந்தியர் தெரிவித்தார்.