Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் தயாரித்த 1½ லட்சம் ஆக்சிஜன் உபகரணங்கள் வாங்க மத்திய அரசு ஒப்புதல்

மே 13, 2021 06:43

புதுடெல்லி: பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் தயாரித்த 1½ லட்சம் ஆக்சிஜன் உபகரணங்கள் வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) ஆக்சிஜன் செறிவூட்டல் அடிப்படையிலான ஆக்சிஜன் சப்ளை கருவியை தயாரித்துள்ளது. உயர்ந்த மலைப்பகுதிகளில் பணியாற்றும் ராணுவ வீரர்களின் பயன்பாட்டுக்காக இதை தயாரித்துள்ளது.

இந்த கருவி, பெங்களூருவில் உள்ள டி.ஆர்.டி.ஓ.வின் ஆய்வுக்கூடத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் இது திறம்பட செயல்படுவதாக ெதரிய வந்துள்ளது. இதில் 1½ லட்சம் உபகரணங்களை வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ‘பி.எம்.கேர்ஸ்’ நிதியில் ரூ.322 கோடியை பயன்படுத்தி, இந்த சாதனங்கள் வாங்கப்படுகின்றன.

இந்த ஆக்சிகேர் உபகரணம், ஆக்சிஜன் செறிவூட்டல் அடிப்படையில் கூடுதலாக ஆக்சிஜன் சப்ளை செய்கிறது. அதன்மூலம், நோயாளி உயிருக்கு ஆபத்தான நிலைக்கு செல்வதை தடுக்க உதவுகிறது. நோயாளியின் உடல்நிலையை பொறுத்து அவருக்கு ஆக்சிஜன் நுகர்வை அதிகரிக்க உதவுகிறது. ஆக்சிஜன் சிலிண்டரின் செயல்திறனை அதிகரிக்கிறது. இதை சுகாதார பணியாளர்கள் எளிதாக கையாளலாம். மேலும், ஏதேனும் தவறு ஏற்பட்டால், குரல் வழியில் எச்சரிக்கும் வசதியும் இதில் உள்ளது.

ஆக்சிகேர் எந்திரத்தை பயன்படுத்துவதன் மூலம், 30 முதல் 40 சதவீத ஆக்சிஜனை மிச்சப்படுத்தலாம். இதை வீட்டிலும், தனிமைப்படுத்தும் மையங்களிலும், கோவிட் கேர் மையத்திலும், ஆஸ்பத்திரிகளிலும் பயன்படுத்தலாம். இந்த கருவிகளை ஏற்கனவே சில தொழிற்சாலைகளுக்கு டி.ஆர்.டி.ஓ. அளித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்