![](admin/uploads/.5c7f76a1741018.21200526.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு தளர்வு இல்லாத ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதை பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: ஒரு வாரத்துக்கு தளர்வுகள் இல்லாத கடுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இது நல்ல முடிவு.
தளர்வுகள் இல்லாத ஊரடங்கு என்பது சாலைகளில் காக்கை, குருவி நடமாட்டம்கூட இல்லாததாக இருக்க வேண்டும். இந்த வரையறைக்கு ஏற்ற வகையில்
முழு ஊரடங்கு கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் கரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும். கடுமையான ஊரடங்குக்கு முன்பு அத்தியாவசியப் பொருட்களை வாங்க இன்று கடைகள் திறக்கப்படும்போது அவற்றில் கூட்டம் கூடுவதைத் தடுக்க வேண்டும்.
இன்றும் நாளையும் அனைத்துகடைகளையும் திறக்க அனுமதிப்பது தேவையற்றது. அதை மறுஆய்வு செய்ய வேண்டும். அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளைத் தவிர மற்ற கடைகளை திறப்பது தேவையின்றி கூட்டம் கூடவும், கரோனா தொற்று பரவுவதற்கும் மட்டுமே வழிவகுக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.