Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பலத்த காற்றால் பாம்பன் பாலத்தில் மோதிய படகுகள்- எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்திவைப்பு

மே 26, 2021 10:39

ராமேசுவரம்: வங்கக்கடலில் உருவான யாஸ் புயல் எதிரொலியாக ராமேசுவரம் பகுதியில் 3-வது நாளாக நேற்றும் பலத்த காற்று வீசியதுடன் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதே போல் தனுஷ்கோடி பகுதியிலும் கடல் சீற்றம் தொடருகிறது. குறிப்பாக, அரிச்சல்முனை பகுதியில் கடற்கரையில் உள்ள தடுப்பு சுவரையும் தாண்டி சாலை வரையிலும் கடல்நீர் வந்தது. ஒரு சில இடங்களில் தடுப்பு சுவரின் கற்களும் அலையின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் சரிந்து விழுந்தன.

எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் மோதி கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு ஆக்ரோஷமாக எழுந்தன. பலத்த காற்றால் தனுஷ்கோடி செல்லும் சாலையில் சில இடங்களில் சவுக்கு மரங்களும் முறிந்து கிடந்தன. இதேபோல் பாம்பன் பகுதியிலும் தொடர்ந்து பலத்த காற்று வீசுவதுடன் கடல் சீற்றமாகவே காணப்படுறது. ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி பகுதி சாலை முழுவதும் புழுதியாக பறந்தன.

அதே நேரத்தில் ஒரு சில இடங்களில் கடல் உள்வாங்கிய நிலையிலும் காணப்பட்டது. குறிப்பாக, ராமேசுவரம் துறைமுக கடற்கரையில் நேற்று காலை 7 மணியில் இருந்தே சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. இதனால் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஏராளமான மீன்பிடி நாட்டுப்படகுகள் தரை தட்டியபடி நின்றன.

வழக்கமாக இதுபோன்ற சீசனில் கடல் உள்வாங்கினாலும் பகல் 11 மணிக்கு பிறகு மீண்டும் சகஜ நிலைக்கு திரும்புவது வழக்கம். ஆனால் நேற்று மாலை வரையிலும் கடல் உள்வாங்கிய நிலையிலேயே காணப்பட்டது. காற்றால் படகுகள் சேதம் அடையாமல் இருக்க அவற்றை பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இதற்கிடையே ராமேசுவரத்தில் இருந்து நேற்று மாலை 5 மணிக்கு சென்னைக்கு புறப்படும் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் பலத்த காற்றின் காரணமாக ராமேசுவரம் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. இரவு 8 மணி வரையிலும் அந்த ரெயிலானது ராமேசுவரத்தில் இருந்து புறப்படவில்லை.

பாம்பன் தெற்குவாடி துறைமுக கடல் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த 2 மீன்பிடி விசைப்படகுகள் நேற்று இரவில் நங்கூர கயிறு அறுந்து பாம்பன் தூக்குப்பாலத்தில் மோதியபடி நின்றன. காற்றின் வேகம் மிக அதிகமாக இருந்ததால் படகுகளை இரவில் மீட்க முடியவில்லை. பலத்த காற்றால் பல இடங்களில் மின்கம்பிகள் மீது மரங்கள் முறிந்து விழுந்தன. இதே போல் சில இடங்களில் மின்கம்பங்களும் சாய்ந்தன. இதனால் நேற்று பிற்பகல் 3 மணியில் இருந்து மின்வினியோகம் தடைபட்டது. இரவிலும் மின்சாரம் வராததால் ராமேசுவரம் இருளில் மூழ்கியது.

தலைப்புச்செய்திகள்