![](admin/uploads/.5cada65dd94e28.19739326.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மயிலாடுதுறை: பட்டமங்கலம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாமை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார். நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக பயனாளிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்து காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தை உள்ளடக்கிய நாகப்பட்டினம் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 817-ஆக அதிகரித்தது. மேலும், கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இதனால், கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது. மயிலாடுதுறை ஒன்றியம் பட்டமங்கலம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா ஆகியோர் துவக்கி வைத்தனர். மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
இம்முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள காலைமுதல் ஏராளமானோர் வந்து காத்திருந்தனர். ஆனால், 300 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு, அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இதனால், டோக்கன் பெற முடியாமல் பயனாளிகள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். பட்டமங்கலம் ஊராட்சியில் தொடர்ந்து இரண்டு நாள்கள் முகாம் நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.