Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்ற 10 விற்பனையாளர்களின் உரிமங்கள் ரத்து

ஜுன் 05, 2021 01:56

சென்னை: முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் 5 முக்கிய அரசாணைகள் பிறப்பித்திருந்தார். அதில் 2-வதாக மக்களின் நலன் கருதி, ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் வீதம் குறைத்து ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அவரது ஆணைக்கிணங்க பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நந்தனம் ஆவின் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 16-ந்தேதி விற்பனையை தொடங்கி வைத்தார். இந்த அரசாணைக்கு ஏற்ப அனைத்து ஆவின் பார்லர்கள் மற்றும் சில்லரை விற்பனை கடைகளில் லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் குறைத்து, ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

அதனை தொடர்ந்து அமைச்சர் சா.மு.நாசரின் உத்தரவின் அடிப்படையில், ஆவின் மேலாண்மை இயக்குநரால் உடனடியாக சிறப்பு குழுவை அமைத்து சென்னையில் உள்ள அனைத்து சில்லரை விற்பனை கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் கூடுதல் விலைக்கு விற்ற 11 சில்லரை விற்பனை உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.

தற்போது சிறப்பு குழு பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டபோது மேலும் 10 சில்லரை விற்பனை கடைகளில் ஆவின் பால் கூடுதல் விலைக்கு விற்பதாக தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து விற்பனையாளர்கள் ஈட்டியாபுரம்-நேதாஜி, பழைய பெருங்களத்தூர்- அமிதக் கவி, புதுபெருங்களத்தூர்- ஜெயந்தி, மேற்கு தாம்பரம்- லட்சுமணன், வரதராஜபுரம்-கோதண்டராமன், புதுபெருங்களத்தூர்- சாய் ஸ்டோர், சூளைமேடு- முரளிதாஸ், வண்ணாரப்பேட்டை- வினோத்குமார், திருவொற்றியூர்- எஸ்.எம்.மில் நிலையம் ஆகியோரது சில்லரை விற்பனை உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்பட்டன.

இது போன்ற தவறுகளை சில்லரை விற்பனை உரிமையாளர்கள் செய்யும்பட்சத்தில் அவர்கள் உரிமம் ரத்து செய்யப்படும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

தலைப்புச்செய்திகள்