Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் எவற்றுக்கெல்லாம் அனுமதி?- தமிழக அரசு

ஜுன் 05, 2021 02:01

சென்னை:  தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கானது வருகிற 7-ந்தேதி முதல் 14-ந்தேதி காலை 6 மணி வரை சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தொற்று பரவலாக பல மாவட்டங்களில் கட்டுக்குள் வந்துள்ள போதிலும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மட்டும் தொற்று பரவல் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது. எனவே இம்மாவட்டங்களில் தொற்று பரவலைக்கட்டுக்குள் கொண்டு வரும் வகையிலும் அதே சமயம் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் தற்போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன், மேற்காணும் 11 மாவட்டங்களில் கீழ்க்கண்ட அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் 7-ந்தேதி முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. 

* தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும். 

* காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதி.

* மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். 

* இறைச்சிக் கூடங்கள் மொத்த விற்பனை மட்டும் அனுமதிக்கப்படும். 

* அனைத்து அரசு அலுவலகங்களும், 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். 

* சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திரப்பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும். 

* தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

தலைப்புச்செய்திகள்