Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பொருளாதார சரிவில் இருந்து மீள மூலதன செலவை அதிகரிக்க வேண்டும்: பொதுத் துறை நிறுவனங்களுக்கு நிதி அமைச்சர் அறிவுறுத்தல்

ஜுன் 06, 2021 05:22

புதுடெல்லி:மத்திய பட்ஜெட்டில் நிர்ணயிக் கப்பட்ட மூலதன செலவு இலக்கு எட்டப்படுவதை பொதுத் துறை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தி உள்ளார். கரோனா வைரஸ் பரவலால் ஓராண்டுக்கும் மேலாக பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பெரும்வீழ்ச்சி கண்டுள்ள பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு பெரும்நிதித் தொகுப்பை பட்ஜெட்டில் அறிவித்தது. ஆனால் கரோனாவின் இரண்டாம் அலை தீவிரமானதால் மேலும் அரசுக்கு நெருக்குதல்கள் ஏற்பட்டுள்ளன.

இத்தகைய நிலையில் பொருளாதாரத்தை மீட்க நிறுவனங்கள் மூலதன செலவினங்களை திட்டமிட்டபடி மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மத்திய அமைச்சகங்கள் மற்றும் அவற்றின் பொதுத் துறை நிறுவனங்களின் மூலதன செலவின திட்டங்களை ஆய்வு செய்த நிதி அமைச்சர் தற்போது பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவை குறைத்து மீண்டும் வளர்ச்சியைக் கொண்டுவர மூலதன செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது: பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்டுள்ள மூலதன செலவின இலக்கை எட்டுவதற்கான திட்டங்களை பொதுத் துறை நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும். சம்பந் தப்பட்ட துறை அமைச்சகங்கள் மூலதன செலவு இலக்கு எட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக மின்துறை மற்றும் ரயில்வே துறை அமைச்சகங்கள் மூலதன செலவின திட்டங்களைச் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மூலதன செலவு இலக்கு 34 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்கு பொதுத் துறை நிறுவனங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் ஊரடங்கு நடவடிக்கைகளால் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் நிதி நெருக்கடிக்கு ஆளாகாமல் பாதுகாக்க பொதுத் துறை நிறுவனங்கள் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்குத் தர வேண்டிய நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். 
 

தலைப்புச்செய்திகள்