Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிளஸ்-2 தேர்வு ரத்து: முக ஸ்டாலினுக்கு ஆசிரியர் சங்கம் நன்றி

ஜுன் 06, 2021 05:29

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு குறித்து ஆசிரியர் சங்கங்கள், பெற்றோர்கள், கல்வியாளர்களின் கருத்துக்கேட்டு முடிவெடுக்கப்படும் என்று அறிவித்த பள்ளி கல்வித்துறை அமைச்சரின் கருத்தினை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கின்றது.

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை பல உயிர்களை பலிவாங்கி இருக்கும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக முதல்வரின் செயல்பாடுகள் நாடே போற்றும் வகையில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 35 ஆயிரத்துக்கும் மேலாக கொரோனா தொற்று உறுதிச்செய்யபட்ட நிலையில் அரசின் துரித நடவடிக்கையால் படிப்படியாக குறைந்து வருவது ஆறுதல் அளிக்கிறது.

இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனம் கொரோனாவின் 3-வது அலை சிறிய வயதினரை அதிகம் பாதிக்கும் என எச்சரித்துள்ளது. பெருந்தொற்றுக் குறையும் வரை நாட்களை கடத்தி கல்வியாண்டினை நீட்டித்தால் மாணவர்களிடையே உள்ளச் சோர்வை ஏற்படுத்தும். மேலும் 8 லட்சத்து 45 ஆயிரம் மாணவர்கள் எழுதும் பிளஸ்-2 தேர்வினை நடத்தினால் பெரும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.ஆகையால் மாணவர்களின் நலன்கருதி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

தமிழ்நாட்டிலும் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வினை கொரோனா பெருந்தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு மட்டும் ரத்து செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் வழங்க ஆய்வுக்குழு அமைத்தது வரவேற்புக்குரியது. தற்போது மாணவர்களின் படிப்பா உயிரா என்றால் உயிர்தான் முக்கியம் என்ற மக்கள் முதல்வரின் செயல்பாடுகள் சிறப்பு.

மேலும் நீட் தேர்வினை ரத்துசெய்து மதிப்பெண் அடிப்படையில் மருத்துவபடிப்புக்கு தேர்வு செய்திடவும், புதியக்கல்விக் கொள்கையின் அடிப்படையில் இளங்கலை, பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்திடும் வகையில் வேறு வழியில் நுழைய முயன்றால் அதனை முழுமையாக தடுத்திடவும் தமிழக அரசினை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன். அரசின் முயற்சிகளுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் உறுதுணையாய் இருக்கும் .
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

தலைப்புச்செய்திகள்