Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விரைவில் ரிலையன்ஸ் கிகாபைபர் சேவை

ஏப்ரல் 24, 2019 05:39

மும்பை: மொபைல் போன் சந்தையை கலக்கிய, 'ரிலையன்ஸ் ஜியோ' நிறுவனம், அடுத்து, 'கிகாபைபர்' திட்டம் மூலம், மாதம், 600 ரூபாய் கட்டணத்தில், 'பிராட்பேண்ட், டிவி' தொலைபேசி வசதிகளை, விரைவில் நாடு முழுவதும் அறிமுகப்படுத்த உள்ளது. 

ரிலையன்ஸ் ஜியோ தற்போது, மும்பை மற்றும் டில்லியில், சோதனை அடிப்படையில் இச்சேவையை இலவசமாக வழங்கி வருகிறது. எனினும், 'ரூட்டர்' பயன்பாட்டிற்கு, ஒரு முறை டெபாசிட்டாக, 4,500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இச்சேவையில், வினாடிக்கு, 100 மெகாபைட் வேகத்தில், 100 ஜி.பி., தகவல்களை பதிவிறக்கலாம். விரைவில் இச்சேவையை, நாடு முழுவதும் விரிவுபடுத்த, ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளது. 

மாதம், 600 ரூபாய் கட்டணத்தில், இணையம், தொலைக்காட்சி, தொலைபேசி சேவைகள் வழங்கப்பட உள்ளன.அத்துடன், குரல் வழி உத்தரவு சேவை, காணொலி காட்சி, மெய்நிகர் வீடியோ விளையாட்டு, பொருட்கள் வாங்குவது, 'ஸ்மார்ட்' வீடுகளில் மின்னணு சாதனங்களை இயக்குவது உள்ளிட்ட வசதிகளை நுகர்வோர் பெறலாம். இதற்காக, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 'டென் நெட்ஒர்க்ஸ், ஹாத்வே கேபிள், டேடா காம்' ஆகிய நிறுவனங்களில் பெருமளவு முதலீடு செய்துள்ளது. விரைவில், இந்நிறுவனங்களில், பெரும்பான்மை பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளது. 

இந்நிறுவனங்கள் ஏற்கனவே, கேபிள், 'டிவி' தொழிலில் உள்ளதால், அவற்றின் கீழ் உள்ள, 27 ஆயிரம் கேபிள் ஆப்பரேட்டர்கள் மூலம், 1,100 நகரங்களில், ரிலையன்ஸ் ஜிகாபைபர் சேவை வழங்கப்படும். ரிலையன்ஸ் ஜிகாபைபர் சேவை அறிமுகமாவதால், பி.எஸ்.என்.எல்., பார்தி ஏர்டெல் உள்ளிட்ட போட்டி நிறுவனங்கள், கவர்ச்சிகரமான பிராட்பேண்ட் திட்டங்களை அறிமுகப்படுத்த துவங்கியுள்ளன. 

ரிலையன்ஸ் ஜியோ கிகாபைபர் சேவையில், ஒருவர், மாதம், 600 - - 1,000 ரூபாய் வரை செலுத்தி, வீட்டில் உள்ள, 40 மின்னணு சாதனங்களை இணைத்துக் கொள்ளலாம். வினாடிக்கு, 100 மெகாபைட் வேகத்தில், 100 ஜி.பி., தகவல்களை இலவசமாக பதிவிறக்கலாம். தொலைபேசி, தொலைக்காட்சி சேவைகள் அடுத்த மூன்று மாதங்களில் சேர்க்கப்படும். இச்சேவைகள் அனைத்தும், ஓராண்டிற்கு இலவசமாக வழங்கப்படும். 

 

தலைப்புச்செய்திகள்