Sunday, 29th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மடத்துக்குளம்: மடத்துக்குளம் தாலுகா பகுதியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீட்டு உபயோக மின் இணைப்புகள் உள்ளன.வழக்கமாக மின் பணியாளர்கள் வீடுகள் தோறும் சென்று அங்குள்ள மீட்டர்களில் மின் பயன்பாட்டை கணக்கீடு செய்து அட்டையில் பதிவு செய்வார்கள். அதில் குறிப்பிட்ட தொகையை மின் கட்டணமாக செலுத்த வேண்டும். தற்போது கொரோனா தொற்று பரவி வருவதால் இதை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது.
அலுவலகங்களில் 30 சதவீதத்திற்கும் குறைவான ஊழியர்கள் மட்டுமே பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்தவிதிமுறையால் மின்வாரியத்தின் மின் கணக்கீட்டு பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்நுகர்வோர்கள் தங்கள் வீடுகளில் உள்ள மீட்டர்களை பார்த்து சுயமாக கணக்கீடு செய்து அந்த அடிப்படையில் மின் கட்டணம் செலுத்த தொடங்கியுள்ளனர். இதில் குளறுபடிகள் ஏற்படுவதை தடுக்க மின் கட்டணம் செலுத்தும் போது விண்ணப்பம் கொடுக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதாவது சம்பந்தப்பட்ட சர்வீஸ் எண்ணின் உரிமையாளர்,மின்வாரியத்திற்கு கொடுக்கும் விண்ணப்பத்தில் வீட்டு உரிமையாளரின் பெயர், மின் இணைப்பு எண், எந்த தேதியில் கணக்கீடு செய்யப்பட்டது. அப்போது எத்தனை யூனிட் காட்டுகிறது போன்ற தகவல்களையும், சுயகணக்கீட்டிற்கு வீட்டு உரிமையாளரே பொறுப்பு எனவும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டு உறுதி அளிக்க வேண்டும். அதன்பிறகு மின் கட்டணம் வசூல் செய்யும் கவுண்டரில் கொடுத்து மின் கட்டணத்தை செலுத்தலாம்.
இதுகுறித்து மின்வாரியத்தினர் கூறுகையில்,
மின் கட்டணம் செலுத்துவதில் எந்த வித தவறும் ஏற்படக்கூடாது என்பதற்காக சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளரிடம் விண்ணப்பம் பெறப்படுகிறது. இந்த படிவத்தின் மாதிரி பொதுமக்கள் பார்வைக்கு ஒட்டப்பட்டுள்ளது என்றனர்.