Saturday, 28th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
காரமடை: தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் மதுபான கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் காய்கறி வாகனங்களில் மது பாட்டில்களை கடத்தி வந்து கூடுதல் விலைக்கு விற்று வருவதுடன் தற்போது கள்ளச்சாராயம் விற்பனையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனை தடுக்கும் வகையில் மேற்கு மண்டல ஐ.ஜி. உத்தரவின் பேரில் கோவை மாவட்ட போலீசார் துரித நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காரமடை ஊரக பகுதிகளாக இருக்க கூடிய வனப்பகுதியை ஒட்டிய மலை அடிவார பகுதிகளான வெள்ளியங்காடு, தோலம்பாளையம், மாந்தரைக்காடு, தோலம்பாளையம், ஏழுசுலி உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறதா? ஊறல் போட்டுள்ளனரா? என்பதை டிரோன் கேமிரா மூலம் மதுவிலக்கு போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
பெரியநாயக்கன்பாளையம் மது விலக்கு போலீசார் மற்றும் காரமடை போலீசார் இணைந்து வனப்பகுதியில் சோதனை நடத்தியதுடன் ஆட்கள் நடமாட்டம் உள்ளதா? என டிரோன் கேமிரா மூலம் இரண்டு கிலோ மீட்டர் வரை பறக்கவிட்டு கண்காணித்தனர். டிரோன்கள் மூலமாக கண்காணிக்கப்படுவதால் கள்ளச்சாராயம் காய்ச்சுவது, விற்பனை செய்வது நிச்சயமாக தடுக்கப்படும் எனவும், அப்படி எவரேனும் சந்தேகப்படும் படியான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.