Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நன்னிலம் அருகே மதுபாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது

ஜுன் 13, 2021 11:37

நன்னிலம்: கொரோனா ஊரடங்கால் பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்தநிலையில் புதுச்சேரியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதனால் தமிழகத்தில் இருந்து மதுப்பிரியர்கள் புதுச்சேரி மாநிலமான காரைக்காலுக்கு இருசக்கர வாகனங்களில் சென்று மதுபாட்டில்களை வாங்கி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று நன்னிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுணா, சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் காசிராமன் ஆகியோர் ஆண்டிபந்தல் பகுதியில் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 3 மோட்டார் சைக்கிள்களை மறித்து சோதனை செய்தனர். பின்னர் மோட்டார்சைக்கிள்களில் வந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் பெரும்பண்ணையூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன்(வயது38), தஞ்சை கரந்தை பகுதியை சேர்ந்த சுரேந்திரன்(19), வண்டுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த வெங்கடேசன்(26) ஆகியோர் என்பதும், அவர்களிடம் 30 புதுச்சேரி மதுபாட்டில்கள் இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் 3 பேரையும் கைது செய்து அவர்்களிடம் இருந்த 3 மோட்டார்சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

தலைப்புச்செய்திகள்