Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தளவாய்புரம் அருகே கிணற்றில் குளித்த 2 வாலிபர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

ஜுன் 18, 2021 11:30

தளவாய்புரம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் அறிவுராஜ் (வயது 22). இவர் நாகர்கோவிலில் ரப்பர் தோட்டத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் தவமணி (18). இவர் தளவாய்புரத்தில் உள்ள கோழிக்கறிக் கடையில் வேலை பார்த்து வந்தார்.

உறவினர்களான அறிவுராஜூம், தவமணியும் நேற்று முன் தினம் மாலை நண்பர்கள் சிலருடன் தளவாய்புரம் அருகே முகவூர் அசையா மணிவிலக்கு செல்லும் ரோட்டில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். சுமார் 60 அடி ஆழம் உள்ள அந்த கிணற்றில் முழுவதுமாக தண்ணீர் நிரம்பியிருந்தது. நண்பர்கள் குளித்து விட்டு வீட்டுக்கு சென்று விட்ட நிலையில் அறிவுராஜூம், தவமணியும் கிணற்றின் அருகே இருந்து மது அருந்தி விட்டு மீண்டும் கிணற்றில் குளித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

இது குறித்து தகவல்அறிந்த தளவாய்புரம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி ஜெயராம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றில் மூழ்கி இறந்த 2 பேரின் உடல்களையும் தேடினர். சுமார் 5 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. வாலிபர்களின் உடல்கள் மீட்கப்படுவதை காண அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கிணற்றுப்பகுதியில் கூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மீட்கப்பட்ட வாலிபர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது பற்றி தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கிணற்றில் மூழ்கி 2 வாலிபர்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்