Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஜுன் 18, 2021 11:36

புதுடெல்லி: தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தனி விமானம் மூலம் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக அவர் டெல்லி சென்றுள்ளார். டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தி.மு.க எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மற்றும் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அதன்பின், அவரை டெல்லியின் முக்கிய பிரமுகர்கள் சந்தித்தனர். மதிய உணவுக்குப் பின் ஓய்வெடுத்த அவர், தி.மு.க.வின் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அதைத் தொடர்ந்து, சரியாக மாலை 4.45 மணிக்குப் புறப்பட்டு பிரதமர் இல்லத்துக்குச் சென்றார். அவருடன் அமைச்சர் துரைமுருகன், மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் சென்றனர். 

பிரதமர் மோடியைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் நலன் சார்ந்த 30-க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். நீட் தேர்விலிருந்து விலக்கு, தடுப்பூசி, கருப்பு பூஞ்சை மருந்து, கொரோனா பேரிடர் நிதி, நிலுவை ஜி.எஸ்.டி தொகை குறித்து பிரதமரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார். இந்த சந்திப்பு சுமார் 25 நிமிடங்கள் வரை  நடைபெற்றது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவா்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசுகிறார்.

தலைப்புச்செய்திகள்