Saturday, 28th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு நிவாரணத்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பொன்முடி வழங்கினார். அருகில் ஆட்சியர் மோகன் உள்ளார். விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்து சமய அறநிலையத் துறை சார்பாக கோயில்களில் மாத ஊதியமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்கள் என 262 பேருக்கு உதவித்தொகையாக ரூ.4,000, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகையான மளிகைப் பொருட்களை நேற்று அமைச்சர் பொன்முடி வழங்கினார்.அப்போது அவர் பேசியது:
திமுக குறித்து தவறாக புரிதல் உள்ளது. திமுக யாரையும் வேறுபடுத்தி பார்ப்பதில்லை. 1968-ம் ஆண்டு கும்பகோணத்தில் மகாமகம், 32 ஆண்டுகளுக்கு பின்பு திருவாரூர் தேரை ஓடவைத்தது, கோயில்களில் அறங்காவலர்களில் பட்டியல் பிரிவினர், பெண்களை இடம்பெற செய்தது, அமைப்பு சாரா தொழிலாளர்கள் வாரியத்தில் பூசாரிகள், அர்ச்சகர்களை இணைத்தது எல்லாம் திமுகஆட்சிகாலத்தில் நடைபெற்றவை தான். அந்த வழியில் தற்போதுமுதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தற்போது உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவி வழங் கப்படுகிறது. அர்ச்சகர்கள், பூசாரிகள் சொன்னால்தான் பொதுமக்கள் கேட்பார்கள். அனைவரையும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள சொல்லுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
ஆட்சியர் த.மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .த.ஸ்ரீ நாதா, எம்பி ரவிக்குமார், எம்எல்ஏக்கள் லட்சுமணன், புகழேந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) சரஸ்வதி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திரன், உதவி ஆணையர் ராமு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.