![](admin/uploads/.60c0b0997ad420.85961247.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
அடுக்கம்பாறை: தமிழகத்தில் கொரோனா தொற்று 3-வது அலை 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அதிகளவில் தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளுக்காக அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளில் குறைந்தபட்சம் 100 படுக்கைகள், அதில் 25 ஐ.சி.யு. வசதி உள்பட அனைத்துப் படுக்கைகளும் ஆக்சிஜன் வசதியுடன் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து அரசு மருத்துவமனைகளில் உள்ள குழந்தைகள் வார்டுகளில், சிறப்பு கொரோனா பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் வார்டில் குழந்தைகளுக்கான சிறப்பு கொரோனா பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. குழந்தைகள் நலத்துறை மருத்துவர்களும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவக் கல்லூரி டீன் செல்வி கூறுகையில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நலப்பிரிவில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையில் கூடுதலாக 700 முதல் 800 வரை உள்ள படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி செய்யப்படுகிறது.
தற்போது 12-க்கும் மேற்பட்ட குழந்தைகள் நல மருத்துவர்கள் உள்ளனர். இங்குள்ள பொது மருத்துவர்களுக்கும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான பயிற்சி அளிக்கப்படுகிறது. குழந்தைகள் நல மருத்துவர்கள், பொது மருத்துவர்கள், மயக்கவியல் மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழுவினர் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர் என்றார்.