Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தருமபுரியில் பெண் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை

ஜுன் 25, 2021 10:38

தருமபுரி: தருமபுரி நெல்லிநகர் கோவிந்ததாஸ் நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி தேவி கருமாரியம்மாள் (வயது 37). இவர் ரெயில்வே போலீசில் ஏட்டாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இயங்கி வரும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவுக்கு மாறுதலாகி ஏட்டாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு கோபிநாத் (14) என்ற மகன் உள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் மகன் கோபிநாத் மட்டும் இருந்தார். இதனால் மகனிடம் ‘சிக்கன்’ வாங்கி விட்டு வா என்று தேவி கருமாரியம்மாள் கூறினார். இதனால் கோபிநாத் கடைக்கு செல்வதற்காக வெளியே புறப்பட்டார். அந்த சமயத்தில் வீட்டில் தனியாக இருந்த அவர், அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிதுநேரம் கழித்து வந்த கோபிநாத், வீட்டின் அறையில் தேவி கருமாரியம்மாள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தாயின் உடலை பார்த்து அவர் கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தருமபுரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் தேவி கருமாரியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் ஏட்டு தேவி கருமாரியம்மாள் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

கடந்த சில மாதங்களாக அவருக்கு தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அடிக்கடி பாதிப்பு ஏற்பட்டு வந்ததால் மன உளைச்சலில் இருந்து வந்த அவர், மகனை கடைக்கு அனுப்பி விட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. தருமபுரியில் பெண் போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்