Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உடுமலை அருகே அரசு மருத்துவரின் முயற்சியால் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மலைவாழ் மக்கள்

ஜுன் 30, 2021 11:54

உடுமலை: திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குஉட்பட்டு ஏராளமான மலைவாழ் கிராமங்கள் உள்ளன. அங்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். வனப்பகுதியில் விவசாயம் செய்தும், கூலி வேலைக்குச் சென்றும் தங்களின் பொருளாதார நிலையை தக்க வைத்துக் கொள்கின்றனர்.

கரோனா பரவல் தொடங்கியது முதலே எரிசினம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மலைவாழ் கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எனினும் தொடக்கத்தில் அவர்கள் தடுப்பூசி செலுத்த சம்மதிக்கவில்லை. பாரம்பரிய மருத்துவ முறைகளை பின்பற்றிக் கொள்வதாக தெரிவித்தனர். இதற்கிடையே சமூக ஆர்வலர்கள் சிலர் மலைவாழ் மக்களுக்கு தேவையான மளிகை சாமான்களை இலவசமாக விநியோகித்து வந்தனர். ஆனால் கருமுட்டி மலைவாழ் கிராம மக்களுக்கு இந்தஉதவி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையறிந்த அரசு மருத்துவர் உமாராணி தன் சொந்த முயற்சியில் 57 குடும்பங்களுக்கு தேவையான அரிசி, மளிகை சாமான்கள் அடங்கிய நிவாரணப் பொருட்களுடன் கருமுட்டிக்கு சென்றார். அங்கு நேற்று முன் தினம் மளிகை பொருட்களை இலவசமாக கொடுத்ததுடன் அனைவருக்கும் அறிவுரை கூறி கரோனா முதல் தவணைதடுப்பூசியும் போட்டு வெற்றி கண்டுள்ளார். தடுப்பூசி செலுத்திக் கொண்ட மலைவாழ் மக்கள் ‘நாங்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டோம்’ எனும் வாசகம் அடங்கிய பதாகைகளை காட்டி மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் செயல்பட்டனர்.

இதுகுறித்து அரசு மருத்துவர் உமாராணி கூறும்போது, ‘தமிழக முதல்வர் அறிவிப்புக்கு இணங்க எனது மாத ஊதியத்தில் ஒருநாள் சம்பளத்தை இதுபோன்ற சேவைக்காக ஒதுக்கி வைத்து வருகிறேன். மலைவாழ் மக்களிடையே நடத்தப்பட்ட மருத்துவ முகாம்களுக்கு சென்றுவந்ததில் அவர்களில் பலர் எனக்கு அறிமுகமாகினர். அவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் அச்சமும், தயக்கமும் இருந்தது.

அவர்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை கொடுத்து உதவியதுடன், கிராமத்தில் வசிக்கும் 40 பேருக்கு முதல் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. இப்பணிக்காக 3 பெண் மருத்துவர்கள் உட்பட 4 பேர் தங்களது ஒரு நாள் ஊதியத்தை அளித்தனர். இது தவிர தனியார் சமூக சேவை அமைப்பு சார்பில் அனைவருக்கும் குளியல் சோப்பு அளிக்கப்பட்டது’ என்றார். அரசு மருத்துவர் உமாராணி, தனது சொந்த கிராமமான கரட்டு மடத்தில்எளியவர்களுக்கு உணவு விநியோகிப்பதற்காக தனது 2 மாத ஊதியத்தை முழுவதுமாக ஊராட்சிக்கு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்