![](admin/uploads/.60c2036a4234d4.61223452.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மதுரை: மதுரையைச் சேர்ந்த ஆனந்த்ராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-
மதுரை ஆவினில் 62 காலிப்பணியிடங்களை நிரப்ப கடந்த 2019-ம் ஆண்டில் அறிவிப்பு வெளியானது. இதில் 48 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இந்த நியமனம் விதிகளை பின்பற்றி நடைபெறவில்லை. இந்த முறைகேட்டில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் ஆவின் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது. எனவே கடந்த 2019-ம் ஆண்டில் மதுரை ஆவின் பணிக்கு 48 பேர் தேர்வு செய்யப்பட்டதில் நடந்த முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “மனுதாரர் தெரிவிக்கும் ஆவின் பணியிட முறைகேடு தொடர்பாக ஏற்கனவே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.