![](admin/uploads/.64d5dfa3a11a60.77560348.jpg)
Sunday, 30th June 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலைக் கொடுத்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
அந்த வகையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,617 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 04 லட்சத்து 58 ஆயிரத்து 251 ஆக உள்ளது. நாடுமுழுவதும் கொரோனா தொற்று பாதிப்புடன் 5 லட்சத்து 09 ஆயிரத்து 637 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கேரளா, அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, ஒடிசா, சத்தீஸ்கர், மணிப்பூர் ஆகிய 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு உயர்மட்டக் குழு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தக் குழுக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஆறு மாநிலங்களும் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து முதல் தகவலைத் திரட்டும். அதன்பின் அங்கே மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்கும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் இரண்டு பேர் கொண்ட குழு செல்லும். அதில் ஒருவர் மருத்துவ நிபுணராகவும், மற்றொருவர் பொது சுகாதாரத் துறை நிபுணராகவும் இருப்பார்.
இந்தக் குழுவினர் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் கொரோனா தடுப்பு நடவடிக்கை முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும். அங்கு கொரோனா பரிசோதனை, கண்காணிப்பு, கட்டுப்பாடுகள் பகுதியை உருவாக்குதல் ஆகியனவற்றை கண்காணிப்பார். மேலும், கொரோனா தடுப்பு வழிமுறைகளை மக்கள் பின்பற்றுகின்றனரா என்பதையும் ஆராய்வர்.