Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சுவேந் அதிகாரியின் பாதுகாவலர் உயிரிழப்பு வழக்கு: சிஐடி விசாரணைக்கு எடுத்துக் கொண்டது

ஜுலை 12, 2021 11:37

மேற்கு வங்காளத்தின் எதிர்க்கட்சி தலைவரான சுவேந் அதிகாரி, பாதுகாவலர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் சிபிஐ விசாரணையை எதிர்கொள்ள உள்ளார்.

மேற்குவங்காள பா.ஜ.க. தலைவர்களில் சுவேந் அதிகாரியும் ஒருவர். திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.-வில் இணைந்த இவர் நடந்து முடிந்த மேற்குவங்காள சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியை தோற்கடித்தார். தற்போது மேற்கு வங்காள சட்டசபை எதிர்க்கட்சி தலைவரக உள்ளார்.

இவர் 2018-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது அம்மாநிலத்தின் போக்குவரத்து துறை மந்திரியாக பணியாற்றி வந்தார். அப்போது, சுவேந் அதிகாரியின் பாதுகாவலராக சப்ரதா சக்ரபோத்தி என்பவர் செயல்பட்டு வந்தார்.

சுவேந் அதிகாரியின் பாதுகாவலர் சப்ரதா சக்ரபோத்தி கடந்த 2018 அக்டோபர் 13-ம்தேதி தனது வீட்டில் இருந்தபோது தற்கொலை செய்துகொண்டார். தான் வைத்திருந்த துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனாலும், தற்போது வரை இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.

தனது கணவரின் உயிரிழப்பில் மர்மம் உள்ளதாகவும், இதில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுவேந் அதிகாரிக்கு தொடர்பு உள்ளதாகவும் கூறி அவர் மீது சப்ரதா சக்ரபோத்தியின் மனைவி காவல் நிலையத்தில் சமீபத்தில் புகார் அளித்தார். இந்த புகாரையடுத்து, பாதுகாவலர் சப்ரதா சக்ரபோத்தி உயிரிழப்பு சம்பவத்தில் சுவேந் அதிகாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் சப்ரதா சக்ரபோத்தியின் உயிரிழப்பு வழக்கை சிஐடி விசாரணை நடத்த எடுத்துக்கொண்டது. ஏற்கனவே திரிணாமுல் காங்கிரஸ்- பா.ஜ.க. இடையே கடும் மோதல் நீடித்து வரும் நிலையில் சிஐடி-க்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது சுவேந் அதிகாரிக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

தலைப்புச்செய்திகள்