Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாபர் அசாம் சதம் வீண் - பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து

ஜுலை 14, 2021 10:18

பிர்மிங்காம்: பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் வென்று இங்கிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில், இரு அணிகளுக்கான மூன்றாவது ஒருநாள் போட்டி பிர்மிங்காமில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி 158 ரன்கள் எடுத்தார். தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் 56 ரன்களும், விக்கெட் கீப்பர் ரிஸ்வான் 74 ரன்களும் சேர்த்தனர். இங்கிலாந்து சார்பில் பிரிடன் கார்ஸ் 5 விக்கெட்டும், சாஹிப் மகமுது 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 332 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடியது. ஆறுதல் வெற்றி பெறலாம் என நினைத்த பாகிஸ்தானுக்கு ஜேம்ஸ் வின்ஸ் ஆட்டம் சோதனையாக அமைந்தது. அவருக்கு லூயிஸ் கிரிகோரி நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

இதனால் இங்கிலாந்து அணி 48 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 332 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜேம்ஸ் வின்ஸ் 102 ரன்னும், கிரிகோரி 77 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். பாகிஸ்தான் சார்பில் ஹாரிஸ் ராப் 4 விக்கெட்டும், ஷதாப் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது ஜேம்ஸ் வின்சுக்கும், தொடர் நாயகன் விருது சாகிப் மக்முதுக்கும் வழங்கப்பட்டது.  
 

தலைப்புச்செய்திகள்