Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தூசி: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா நெடும்பிரை கிராமத்தை சேர்ந்தவர் வேலு. அவரது மகன் ரஞ்சித்குமார் (வயது 30). இவர், செய்யாறு சிப்காட் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவி சங்கீதா, மகள் பிரவீனா (3) உள்ளனர்.
ரஞ்சித்குமார் நிலத்துக்கு பூச்சி மருந்து தெளிக்க இருந்தார். அதற்காக அவர் நேற்று முன்தினம் தனது மகளை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு, மாங்கால் கூட்ரோடு பகுதியில் பூச்சி மருந்து வாங்கிவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
தூசியை அடுத்த அழிஞ்சல்பட்டு கிராமம் மெயின் ரோட்டை கடக்கும் போது, அந்த வழியாக வந்த வட மாநிலத்தை சேர்ந்த ஜங்குசர்மா (45) என்பவர் திடீரென குறுக்கே வந்ததால் மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, ரஞ்சித்குமார் தனது குழந்தையோடு கீழே விழுந்தார். அதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பிரவீனா, ஜங்குசர்மா ஆகியோர் லேசான காயத்துடன் தப்பினர்.
அங்கிருந்தவர்கள் 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரஞ்சித்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். 2 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், வெங்கடேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.