Sunday, 7th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சிறுவயதில் தான் தேநீர் விற்ற ரயில்நிலையத்தை புதிப்பித்து இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்தர மோடி. குஜராத்தின் மெஹசானா மாவட்டத்தின் வாட்நகரில் இது அமைந்துள்ளது. இதுகுறித்து மேற்கு ரயில்வே பிரிவின் மேலாளரான ரவி குமார் ஜா கூறும்போது, ‘வாட்நகர் ரயில்நிலையம் பாரம்பரிய வளையத்தின் பகுதியில் அமைந்துள்ளது.
இதனால் அந்த ரயில்நிலையத்திற்கு ரூ.8.5 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு பாரம்பரிய தோற்றம் அளிக்கப்பட்டுள்ளது. இதை இன்று பிரதமர் தம் அலுவலகத்திலிருந்து காணொலி மூலம் திறந்து வைக்கிறார்’ எனத் தெரிவித்தார். இத்துடன் பிரதமர் மோடி குஜராத்தில் வேறு பல திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். காந்திநகர் ரயில்நிலையத்தில் கட்டப்பட்டுள்ள ஐந்து நட்சத்திர விடுதியையும் துவக்கி வைக்கிறார்.
காந்திநகரிலிருந்து வரேதா வரை செல்லும் புறநகர் பயணிகள் ரயிலையும் பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார். இந்த பாதையில் அமைந்திருக்கும் முக்கிய ரயில்நிலையத்தில் வாட்நகரும் ஒன்றாகும். புகழ்பெற்ற தரங்கா மலையின் அருகில் அமைந்துள்ளது வரேதா ரயில் நிலையம். இது புனிதத் தலமாகவும், பிரபல சுற்றுலாதலமாகவும் உள்ளது.
வாட்நகர் ரயில்நிலையத்தில் பிரதமர் மோடியின் தந்தையான தாமோதர்தாஸ் மோடி ஒரு தேநீர் கடை நடத்தி வந்தார். அதில் தனது சிறுவயதில் பிரதமர் மோடி தன் தந்தை விற்கும் தேநீருக்காக உதவி வந்துள்ளார். இதனால், வாட்நகர் ரயில்நிலையம் அதிக பிரபலமாகி விட்டது.