Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாலாற்றின் குறுக்கே அணை கட்டுகிறது ஆந்திரா

ஜுலை 17, 2021 06:40

திருப்பதி: ‛‛பாலாற்றின் குறுக்கே அணைகட்டப்படும்,'' என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளதால் தமிழகத்துக்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் உற்பத்தியாகும் பாலாறு, ஆந்திரா வழியாக தமிழகத்துக்குள் பாய்ந்து கடலில் கலக்கிறது. பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு கடந்த 2003ம் ஆண்டு 0.6 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணை கட்ட குப்பம் அருகே கணேசபுரம் பகுதியில் இடம் தேர்வு செய்தது. ஆனால், தமிழகம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் அணை கட்டுவதில் பிரச்னை ஏற்பட்டது. அதன் பிறகு, அமைந்த சந்திரபாபு நாயுடு ஆட்சியில் பாலாற்றின் குறுக்கே 22 தடுப்பணைகள் கட்டப்பட்டன. ஆந்திராவின் குப்பம் பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதில், தடுப்பணைகள் நிரம்பி, உபரி நீர் தமிழகத்தில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பாய்ந்தது.

இந்நிலையில், குப்பம் தொகுதி ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பொறுப்பாளர் கூறுகையில், “பாலாற்றிலிருந்து தண்ணீர் வீணாக தமிழகத்துக்கு சென்று விடுகிறது. இதைத் தடுத்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பாசன மற்றும் குடிநீர் வழங்க வழி செய்யப்படும். மேலும், 0.6 டி.எம்.சி. தண்ணீர் தேக்கும் அளவுக்கு பாலாற்றின் குறுக்கே அணை கட்ட முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் ஒப்புக்கொண்டார். இதனால் விரைவில் அணைகட்டும் பணி தொடங்கப்படும்,'' என்றார்.
 

தலைப்புச்செய்திகள்