Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தர்மபுரி: தர்மபுரி மதிகோன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். கார் டிரைவர். இவருடைய மனைவி சுகாஷினி (வயது 25). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் சுகாஷினிக்கு 2-வது பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் அந்த குழந்தைக்கு பால் கொடுத்தபோது புரை ஏறி அதனால் குழந்தை திடீரென மயங்கியதாக கூறப்படுகிறது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு குழந்தையை கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி தர்மபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பச்சிளம் பெண் குழந்தையின் திடீர் இறப்பிற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.