Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதுரை முதியோர் இல்லத்தில் மனநிலை பாதித்த பெண் பலாத்காரம்: 68 வயது முதியவர், நிர்வாகிகளிடம் போலீஸார் விசாரணை

ஜுலை 23, 2021 01:22

மதுரை: மதுரையில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த மனநிலை பாதித்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டதில், தற்போது அவர் 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். இது தொடர்பாக அந்த இல்லத்தில் பணிபுரியும் 68 வயது முதியவர் மற்றும் நிர்வாகிகளிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை அழகப்பன் நகரில் கிறிஸ்தவ சேவா சங்க அறக்கட்டளை என்ற பெயரில் முதியோர் இல்லம் செயல்படுகிறது. இதன் தலைவராக ராஜசேகர் உள்ளார். இங்கு வள்ளியூரைச் சேர்ந்த ஜீவனேசன் (68) என்பவர் ஊழியராக உள்ளார். இந்த இல்லத்தில் 3 ஆண்கள் மற்றும் 35 பெண்கள் தங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மாதந்தோறும் ரூ.1000 செலுத்தி வருகின்றனர்.

இங்கு மேலப்பொன்னகரத்தைச் சேர்ந்த 40 வயதுடைய சற்று மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணும் தங்கியிருந்தார். இவர் பெற்றோரை இழந்தவர். இவருக்காக தாய் மாமா முரளி மாதந்தோறும் இல்லத்துக்கு பணம் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென இவர் மயங்கி விழுந்தார். அவரை காப்பக நிர்வாகத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவப் பரிசோதனையில் அவர் 9 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து முதியோர் இல்ல நிர்வாகத்தினர் மதுரை தெற்கு மகளிர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதில், கடந்த ஓராண்டுக்கு முன்பு பொங்கல் தினத்தில் அந்தப் பெண் அவரது உறவினர் வீட்டுக்குச் சென்றுவந்த நிலையில், அவர் கர்ப்பிணியாக இருப்பதாகவும், இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். அதேநேரம், முதியோர் இல்ல நிர்வாகி மற்றும் ஊழியர்கள் மீது சந்தேகம் இருப்பதாக அப்பெண்ணின் மாமா முரளி போலீஸில் புகார் தெரிவித்துள்ளார்.

காவல் ஆய்வாளர் கீதாலட்சுமி விசாரணை நடத்தினார். பின்னர், அவரை மனநல மருத்துவரிடம் அனுப்ப நடவடிக்கை எடுத்தார். அப்போது, முதியோர் இல்லத் தில் உள்ள ஒருவரால்தான் கர்ப்பமடைந்ததாக அவர் தெரி வித்துள்ளார். இது தொடர்பாக இல்ல நிர்வாகி மற்றும் ஊழியர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறிய தாவது: சமூகநலத் துறையின் அனுமதியின்றி இந்த முதியோர் இல்லம் நடத்தப்பட்டுள்ளது. இங்கு தங்கியிருந்தவர்களிடம் பணம் வசூலித்த நிர்வாகம், அவர்களுக்கு முறைப்படி அவ்வப்போது மருத்துவப் பரிசோதனையை செய்யவில்லை. இதன் காரணமாகவே இவர் கர்ப்பமடைந்த விவரம் தாமதமாக தெரிய வந்துள்ளது.

முதல் கட்ட விசாரணையில் இவர் கர்ப்பமடைந்ததற்கு முதியோர் இல்லத்தில் பணிபுரியும் ஜீவனேசன் காரணம் என்பது தெரிய வந்துள்ளது. இவர், 1988-ல் திருமணமாகி, மனைவியை விவாகரத்து செய்த நிலையில், மதுரையிலுள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் பணிபுரிந்து இருக்கிறார். அந்த கிறிஸ்தவ ஆலயத்தின் பரிந்துரையின் பேரில் இந்த முதியோர் இல்லத்தில் கடந்த சில ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். ஜீவனேசன் மற்றும் முதியோர் இல்ல நிர்வாகிகளிடம் விசாரித்து வருகிறோம் என்றனர்.

தலைப்புச்செய்திகள்