![](admin/uploads/.5fba0b5d1f3601.69578088.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரியில் இன்று அதிகாலையில் இருந்தே கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும்காணப்பட்டது. இதனால் சுமார் 10 முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக வீசின.
இதனால் கட்டுமரம் மற்றும் வள்ளம் போன்ற சிறு மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. கோவளம், கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, ஆரோக்கியபுரம், கீழமணக்குடி, மணக்குடி உள்பட பல கடற்கரைக் கிராமங்களிலும் கடல் சீற்றமாக காணப் பட்டது.
இந்த கடற்கரை கிராமங்களிலும் மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டது. கடல் சீற்றம் காரணமாக எழுந்த ராட்சத அலைகளால் வள்ளம் கட்டுமரம் போன்றவைகள் மீன் பிடிக்க முடியாமல் பாதி வழியிலேயே கரைக்கு திரும்பி வந்தனர். சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுவரும் குறைந்த அளவிலான விசைப்படகுகள் மட்டும் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று இருந்தன.
மீன்கள் அதிகளவில் கிடைக்காததால் மீன் விலை கடுமையாக உயர்ந்து இருந்தது. இன்று அதிகாலையில் இருந்தே கன்னியாகுமரியில் மேகமூட்டமாக இருந்ததால் சூரியன் உதயமாகும் காட்சி தெரியவில்லை. அதிகாலையில் சூரிய உதயம் பார்க்க கடற்கரைக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மழையினால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.