Wednesday, 3rd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கரூர்: தனது வீடு, நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தியது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கரூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: சென்னை மற்றும் கரூரில் உள்ள எனது வீடுகள், நிறுவனங்கள் மற்றும் உதவியாளர்கள் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தியுள்ளனர். எனக்கு சென்னை மற்றும் கரூரில் சொந்தவீடு கிடையாது. வாடகை வீடுகளில் தான் வசிக்கிறேன்.
திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையின் முதல் கட்டமாக இந்த சோதனையை நடத்தி உள்ளனர். இதை சட்டப்படி எதிர்கொள்வோம். அதிமுக எதற்கும் தயாராகஉள்ளது.
மேலும், இந்தச் சோதனை எதிர்பார்த்த ஒன்றுதான். சோதனையில் ஆவணங்கள் எதுவும் எடுத்து செல்லப்படவில்லை. 4 நிறுவனங்களில் இருந்து பணம் மட்டும் எடுத்து செல்லப்பட்டுள்ளது. அதற்கு முறையான கணக்குகள் உள்ளன.
சம்மன் அனுப்பும்போது உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தைத் திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோல பொய் வழக்குகள் போட்டு கரூர் மாவட்டத்தில் என்னை செயல்படவிடாமல் தடுத்து விடலாம் என மனக்கணக்கு போட்டுள்ளனர்.
உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு பொறுப்புகளில் உள்ள சிலரை தொழில்ரீதியாக மிரட்டி திமுகவில் இணைக்கின்றனர். அரசு பதவிகளில் உள்ளவர்களை பணியிடமாற்றம் செய்து பழிவாங்குகின்றனர். பல தொழிற்சங்கங்களில் உள்ளவர்களை தொமுசவில் இணைய வற்புறுத்துகின்றனர். மறுத்தால் பணியிட மாற்றம் செய்கின்றனர்.
நான் பதவிக்கு வந்த பிறகு சொத்துகளை சேர்த்தது போல சிலர் கூறுகின்றனர். ஆனால், சாயப்பட்டறை, தறி, கிரஷர் என நான் 35 ஆண்டுகளாக தொழில் செய்து வருகிறேன். எனது வங்கிக்கணக்குகள் எதுவும் முடக்கப்படவில்லை. திமுகவின் அராஜக போக்கு நீண்ட காலம் நீடிக்காது. காலம் இப்படியே போய்விடாது என்றார்.