Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கஞ்சா கடத்தியவரைப் பிடிக்க காரின் முன்பகுதியில் 2 கி.மீ. தொங்கியபடி விரட்டிய காவலர் படுகாயம்

ஜுலை 27, 2021 10:48

கஞ்சா கடத்தியவரை பிடிக்க, அவரது காரில் தொங்கியபடி 2 கி.மீ தொலைவுக்கு விரட்டிச் சென்ற தனிப்படை காவலர் படுகாயமடைந்தார். சினிமாவை மிஞ்சிய இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி விமான நிலையம் பகுதியில் உள்ள இளவரசன் நகரைச் சேர்ந்தவர் முகமது அனீபா(42). இவர் மன்னார்புரம் பகுதிக்கு கஞ்சாவை கடத்தி வருவதாக
மாநகர காவல் ஆணையரின் தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான தனிப்படை போலீஸார், மன்னார்புரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ஒரு காரில் வந்த முகமது அனீபாவை தனிப்படை போலீஸார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால்அவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார்.

இதையடுத்து தனிப்படை போலீஸார், இருசக்கர வாகனங்களில் அந்த காரை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர். செந்தண்ணீர்புரம்- பழைய பால்பண்ணை சந்திப்புக்கு இடைப்பட்ட பகுதியில் சென்றபோது, தலைமைக் காவலர் சரவணன் தனது இருசக்கர வாகனத்தில் காருக்கு முன்பாகச் சென்றுஅதனை வழிமறித்து நிறுத்துமாறு சைகை காட்டினார். ஆனால் முகமது அனீபா காரை நிறுத்தாமல், சரவணன் மீது மோதிவிட்டு தப்பிச்செல்ல முயன்றார். இதில், சரவணன் காரின் முன்பகுதியில் விழுந்து பேனட்டினை இறுக்கிப் பிடித்துக் கொண்டு, காரை நிறுத்துமாறு கூறினார். ஆனாலும், முகமதுஅனீபா காரை நிறுத்தாமல் தொடர்ந்து வேகமாக ஓட்டிச் சென்றார்.

அப்போது, சரவணனின் ஒருகால் தரையில் உரசியபடி சென்றதால், அவருக்கு பலத்த காயம்ஏற்பட்டது. ஆனாலும் முகமதுஅனீபா அதைக் கண்டுகொள்ளாமல் காரை வேகமாக ஓட்டினார். சுமார் 2 கி.மீ தூரத்துக்குப் பிறகு, சஞ்சீவி நகர் சந்திப்பு பகுதியில் டிராபிக் ஜாம் ஏற்பட்டதால் கார் மெதுவாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது தனிப்படை போலீஸார், காரின் பக்கவாட்டு ஜன்னலுக்குள் கையைவிட்டு, சாமர்த்தியமாக காரை நிறுத்தினர்.

பின்னர் காலில் பலத்த காயமடைந்த சரவணனை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்தபோது காலில் சதைப் பகுதி ஆழமாக சேதமடைந்திருந்ததால், பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய முடிவு செய்யப்பட்டது. தகவலறிந்த மாநகர காவல் ஆணையர் அ.அருண் உடனடியாக தனிப்படை  காவலர் சரவணனை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். மேலும் துணை ஆணையர் சக்திவேல், நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்டோர் மருத்துவமனைக்குசென்று சரவணனைச் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இதற்கிடையே பொதுமக்களின் உதவியுடன் காரில் இருந்த அனீபாவை தனிப்படை போலீஸார் மடக்கிப் பிடித்து காந்தி மார்க்கெட் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது காரில் இருந்து சுமார் 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 

தலைப்புச்செய்திகள்