Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

5 குழந்தைகள் பெற்ற கத்தோலிக்க தம்பதிகளுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை

ஜுலை 27, 2021 03:04

திருவனந்தபுரம்: மத்திய கேரளாவில் உள்ள சீரோ மலபார் கத்தோலிக்க ஆலயத்தின் பாலா மறைமாவட்டம் சார்பில் குடும்ப ஆண்டு கடைபிடிக்கப்படுகிறது. இது தொடர்பாக பாலா மறைமாவட்ட ஆயர் ஜோசப் கல்லரங்காட் அனைத்து ஆலயங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பினார். அதில் பாலா மறைமாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ஆலயங்களிலும் குடும்ப ஆண்டு கடைபிடிக்க  வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து அங்குள்ள அனைத்து ஆலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் கத்தோலிக்க குடும்பங்களில் 5 மற்றும் அதற்கு மேல் குழந்தைகள் பெற்ற தம்பதிகளுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அத்தம்பதிகளின் குழந்தைகளுக்கு மறைமாவட்டத்தின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் இலவச கல்வியும், ஆஸ்பத்திரிகளில் இலவச சிகிச்சையும் வழங்கப்படும்.

அக்குழந்தைகளின் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் திட்டங்களும் செய்து கொடுக்கப்படும் என்று பாலா மறைமாவட்ட குடும்ப நல இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இந்த  இயக்கத்தின் பாதிரியார் ஜோசப் குற்றிங்கல் கூறும்போது, கேரளாவில் கத்தோலிக்கர் எண்ணிக்கை  குறைந்து வருகிறது. மாநிலத்தில் 18.38 சதவீதமாக இருந்த கத்தோலிக்கர்கள் இப்போது 14 சதவீதம் பேரே உள்ளனர்.

எனவே தான் கத்தோலிக்கர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்க இந்த உதவிகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது என்றார்.

தலைப்புச்செய்திகள்