Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது- கமல்ஹாசன் வரவேற்பு

ஜுலை 29, 2021 10:43

ஆலந்தூர்: ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா குறித்து சசிதரூர் எம்.பி. தலைமையிலான தகவல் தொழில் நுட்பத்துக்கான பாராளுமன்ற நிலைக்குழு டெல்லியில் கருத்து கேட்பு நடத்தியது. இதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு தனது கருத்துகளை தெரிவித்தார்.
 
பின்னர் டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய கமல்ஹாசன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

டெல்லியில் சினிமா திருத்த சட்டம் குறித்து தந்த மனு பற்றி வெளியே சொல்ல அனுமதி இல்லை. இருந்தாலும் என்னுடைய கருத்து என்னவாக இருக்கும் என தெரிந்தும், அந்த கருத்தை சொல்லுவதற்காக என்னை அழைத்த ஒன்றிய அரசுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன். குழுவில் இருந்தவர்கள் பேச்சு சுதந்திரத்தைபோல் சிந்தனை சுதந்திரத்திலும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்ததால் எனக்கு நம்பிக்கை அளிக்கிறது.

தி.மு.க.வை கண்டித்து அ.தி.மு.க. போராட்டம் நடத்துவது தொடக்க காலம் முதல் செய்கின்ற வேலை. உள்ளாட்சி தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகி கொண்டு இருக்கிறது. இதற்கான எல்லா ஆயத்த ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்.

சங்கரய்யாவுக்கு தந்த ‘தகைசால் தமிழர்’ விருது எனக்கு கிடைத்த பெருமையாகவே கருதுகிறேன். தமிழக மக்களுக்கும், தோழர்களுக்கும் கிடைத்த பெருமையாக கருதுகிறேன். 3 மாத தி.மு.க. ஆட்சியை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்