![](admin/uploads/.5e9854d7520979.86625204.jpg)
Friday, 28th June 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
எடப்பாடி: சேலம் மாவட்டம் சங்ககிரி - ஓமலூர் பிரதான சாலையில், கொங்கணாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட, குமரன் நகர் பகுதியில் சமீபகாலமாக, குறைந்த விலையில் டீசல் விற்கப்படுவதாக பரவிய தகவலை அடுத்து மாநில நெடுஞ்சாலையில் பயணிக்கும் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் குமரன் நகர் பகுதியில் நின்று டீசல் நிரப்பி சென்றன.
இதுகுறித்து தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீசார் அப்பகுதியில் நடைபெறும் டீசல் விற்பனை குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டனர். போலீசாரின் ஆய்வில் அங்கு சிலர் சட்டவிரோதமாக டேங்கர் பதித்து கலப்பட டீசல் விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.
இந்த கலப்பட டீசல் விற்பனை தொடர்பாக ஈஸ்வரன் (வயது 36), தங்கராஜ் (38), அய்யனார் (44) உள்ளிட்ட 3 பேரை கைது செய்த போலீசார், அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 10 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலை பறிமுதல் செய்தனர். இவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பயோ டீசலை கொள்முதல் செய்து, கொங்கணாபுரம் பகுதிக்கு கொண்டு வந்து குறைந்த விலையில் சட்ட விரோதமாக விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இவர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பயோ டீசல் விற்பனையில் ஈடுபட்டிருக்கலாம்? என சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களுக்கு உடந்தையாக இருந்த ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த கண்ணன் (33), அம்மன் குட்டூர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (40) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.