Sunday, 29th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
விமான விபத்தில் இறந்ததா கக் கருதப்பட்டவர் 45 ஆண்டுகளுக்குப் பின் வீடு திரும்பிய சம்பவம் கேரளாவில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் சஜ்ஜத் தங்கல் (70). வளைகுடா நாடுகளில் கலாச்சார நிகழ்ச்சிகளை 1970 களில் நடத்தி வந்தவர். 1976-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அபுதாபியில் இருந்து மும்பை திரும்ப சஜ்ஜத் தங்கல் திட்டமிட்டிருந்தார். ஆனால், விழா நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட மாறுதல்களால் கடைசி நேரத்தில் பயணம் ரத்தாகி, குறிப்பிட்ட விமானத்தில் சஜ்ஜத் வரவில்லை. அவர் வருவதாக திட்டமிட்ட விமானம் விபத்துக்குள்ளானதில் 95 பேர் இறந்தனர். சஜ்ஜத்தும் இறந்துவிட்டதாக குடும்பத்தினர் கருதினர்.
இந்த விபத்தில் சஜ்ஜத் தங்கலின் நண்பர்கள், தொழில்கூட்டாளிகள் பலர் இறந்தனர். பின்னர், மும்பை திரும்பிய அவர் சிறிது காலம் மனநலம்பாதிக்கப்பட்டு தன்னார்வ தொண்டு அமைப்பின் மூலம்சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு பல ஆண்டுகளுப் பின் பழைய நினைவு திரும்பியது. பின்னர் கொல்லத்தில்உள்ள சஜ்ஜத்தின் 91 வயது தாயுடன் தொலைபேசியில் பேச தொண்டு அமைப்பினர் ஏற்பாடு செய்தனர்.
இதைத் தொடர்ந்து கடந்தசனிக்கிழமையன்று தனதுசொந்த ஊரான சதம் கோட்டாவுக்கு சென்ற சஜ்ஜத் தங்கல், 45 ஆண்டுகளுக்குப் பின் தனது குடும்பத்தாருடன் சேர்ந்தார். அவருக்கு இனிப்புடன் காத்திருந்த தாய் பாத்திமா பீவி, தனது மகனைக் கண்டதும் கட்டியணைத்து கண்ணீர் விட்டார். சஜ்ஜத்தும் கண்கலங்கினார். இதைப் பார்த்த ஊர் பொதுமக்களும் கலங்கினர். பின்னர், சஜ்ஜத் கூறுகையில், ‘‘மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது குடும்பத் தாரையும் குறிப்பாக எனது தாயாரையும் வாழ்வில் மீண்டும் சந்திப்பேன் என்று நினைக்கவே இல்லை’’ என்றார்.