Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கோவை: தமிழக சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்டார். அதில் அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்த நிலையில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க முடிவு செய்த அவர், நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் கோவை வந்தார்.
ஆனால் கொரோனா தொற்று அச்சம் காரணமாக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் அவருடைய நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை கமல்ஹாசன் தனது கட்சி நிர்வாகிகளுடன் வந்தார். பின்னர் அவர் கலெக்டர் சமீரனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அதன் பிறகு வெளியே வந்த கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பின்னர் கிராம சபை கூட்டம் நடத்தப்படவில்லை. இதனால் கிராமங்களில் உள்ள பிரச்சினைகள் குறித்து யாருக்கும் தெரிவது இல்லை. அந்த பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் அப்படியே உள்ளது. இதனை தீர்க்க வேண்டும் என்றால் உடனடியாக கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும். இதுகுறித்து கோவை கலெக்டரை சந்தித்து மனு அளித்தேன். மற்ற மாவட்டங்களில் எங்கள் கட்சி நிர்வாகிகள் கலெக்டரை சந்தித்து மனு அளிப்பார்கள். வருகிற 15-ந்தேதி சுதந்திர தினத்தின்று கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும். வருகிற பட்ஜெட்டில் கிராம ஊராட்சிகளுக்கு எவ்வளவு நிதி கொடுக்கிறோம், எந்த நேரத்தில் கொடுக்கிறோம் என்பது குறித்து தனியாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.