Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தினகரன் ஆதரவு 3 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்

ஏப்ரல் 27, 2019 08:53

சென்னை: தமிழக சட்டசபையில் மொத்தம் உள்ள 234 இடங்களில் அ.தி.மு.க.வுக்கு சபாநாயகரையும் சேர்த்து 114 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
தி.மு.க.வுக்கு 88 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரசுக்கு 8 எம்.எல்.ஏ.க்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒரு எம்.எல்.ஏ.வும் உள்ளனர். டி.டி.வி.தினகரன் சுயேச்சை எம்.எல்.ஏ.வாக உள்ளார். 22 இடங்கள் காலியான தொகுதியாக உள்ளது. இதில் 18 தொகுதிகளுக்கு கடந்த 18-ந்தேதி இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மேலும் 4 தொகுதிகளுக்கு வருகிற 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் அ.தி.மு.க.வில் உள்ள 114 எம்.எல்.ஏ.க்களில் விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகிய 3 பேரும் கடந்த 1 ஆண்டாக டி.டி.வி. தினகரனுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து வந்தனர். நடந்து முடிந்த தேர்தலில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர். அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிராக இவர்கள் 3 பேரும் செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சி மேலிடத்துக்கு புகார்கள் சென்றன.

இதனால் அரசு கொறடா ராஜேந்திரன், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துடன் சபாநாயகர் தனபாலை நேற்று சந்தித்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு கொடுத்தார். அதில் கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகிய 3 பேரும் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இதற்கு ஆதாரமாக 3 பேரும் தேர்தலின்போது தினகரன் கட்சிக்கு ஓட்டு கேட்டு பிரசாரம் செய்த புகைப்படங்களையும் இணைத்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் 3 எம்.எல்.ஏ.க்களிடமும் விளக்கம் கேட்க சபாநாயகர் தனபால் முடிவு செய்தார். சட்ட விதிகளை ஆராய்ந்த அவர் 3 எம்.எல்.ஏ.க்களும் என்னென்ன விதிமீறலில் ஈடுபட்டுள்ளனர் என்பதை அறிந்தார். இதைத்தொடர்ந்து 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் விளக்கம் கேட்டு நேற்று இரவு கடிதம் தயாரிக்கப்பட்டது. அதில், “அ.தி.மு.க. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை கொறடா சமர்பித்துள்ளார். இதுகுறித்து நீங்கள் தரும் விளக்கம் என்ன? இக்கடிதம் கண்ட ஒரு வாரத்துக்குள் இதற்கு நீங்கள் விளக்கம் தரவேண்டும். இல்லை என்றால் கட்சி தாவல் விதிப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும்” என்று கூறப்பட்டு உள்ளது.

3 எம்.எல்.ஏ.க்களுக்கும் இந்த கடிதத்தை ரிஜிஸ்டர் தபாலில் அனுப்ப சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு 3 எம்.எல்.ஏ.க்களும் என்ன பதில் அளிக்க போகிறார்கள் என்பதை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை அமையும்.

தலைப்புச்செய்திகள்