Saturday, 28th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: அ.தி.மு.க. அவைத் தலைவர் மசூதனன் (வயது 81) வயது முதிர்வு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கி தனது இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்தார். இந்தநிலையில் மூச்சு திணறல் பிரச்சினை காரணமாக அவர், கடந்த மாதம் 18-ந்தேதி சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனையில் அவரது உடலில் பல உறுப்புகள் செயலிழந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து செயற்கை சுவாச கருவியுடன் (வெண்டிலேட்டர்) டாக்டர்கள் 24 மணி நேர கண்காணிப்பில் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் மதுசூதனன் உடல்நிலை நேற்று மோசமடைந்தது. மதியம் 3.42 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.
மரணமடைந்த மதுசூதனன் உடல் சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு இன்று கொண்டு வரப்பட்டு, அ.தி.மு.க.வினர், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் இன்று அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் தண்டையார்பேட்டை இல்லத்தில் மதுசூதனன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் மதுசூதனன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்தியபின் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மதுசூதனனின் உறவினர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.