Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பஞ்சாப்: சாலை, பள்ளிகளுக்கு ஒலிம்பிக் வெற்றி வீரர்களின் பெயர்கள்

ஆகஸ்டு 07, 2021 05:04

பஞ்சாப்: பஞ்சாப்பில் உள்ள சாலை, பள்ளிகளுக்கு ஒலிம்பிக்கில் வாகைசூடிய வீரர்களின் பெயர்கள் சூட்டப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பஞ்சாப் பள்ளிக் கல்வித்துறை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் விஜய் இந்தர் சிங்லா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியி்ன் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜெர்மனி அணியை 4-5 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது. ஒலிம்பி்க்கில் 41 ஆண்டுகளுக்குப்பின் இந்திய ஆடவர் ஹாக்கி அணி பதக்கம் வென்றுள்ளது. இந்நிலையில் பதக்கம் வென்ற பஞ்சாப் வீரர்களை கவுரவிக்கும் வகையில் அங்குள்ள சாலை, பள்ளிகளுக்கு ஒலிம்பிக்கில் வாகைசூடிய வீரர்களின் பெயர்கள் சூட்டப்படும் என்று அமைச்சர் விஜய் இந்தர் சிங்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''41 ஆண்டுகளுக்குப் பிறகு வெண்கலப் பதக்கம் பெற்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள். இந்த வீரர்கள் நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். அவர்களின் முயற்சியைப் பாராட்டும் சிறு அடையாளமாக வீரர்களின் பெயர்கள், பஞ்சாப்பில் உள்ள சாலை, பள்ளிகளுக்குச் சூட்டப்படும். இதற்கான ஒப்புதலை முதல்வர் அமரிந்தர் சிங் வழங்கியுள்ளார். விரைவில் இதுதொடர்பான பணிகளைத் தொடங்கவும் அறிவுறுத்தி உள்ளார்.

பதக்கம் பெற்ற வீரர்களின் குடியிருப்புப் பகுதியை இணைக்கும் சாலைகளுக்கும், அருகில் உள்ள பள்ளிகளுக்கும் அவர்களின் பெயர் சூட்டப்படும். இது வருங்காலத் தலைமுறையினை ஊக்கப்படுத்தும் விதமாக அமையும். ஒருகாலத்தில் இந்திய விளையாட்டுத் துறையில் பஞ்சாப்பின் பங்களிப்பு மிக அதிகமாக இருந்தது. இந்த ஒலிம்பிக்கில் பஞ்சாப் சார்பில் 20 விளையாட்டு வீரர்கள் அனுப்பப்பட்டனர். ஆண்கள் ஹாக்கி விளையாட்டு வீரர்கள் குழுவில் 11 பேர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்''.

இவ்வாறு அமைச்சர் விஜய் இந்தர் சிங்லா தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்