Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

ஆகஸ்டு 09, 2021 10:47

சேலம்: கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதையடுத்து கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் 2 அணைகளில் இருந்தும் உபரி நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் 14 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்ட நிலையில் நேற்று தண்ணீர் திறப்பு 21 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. கூடுதலாக திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்தடைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

நேற்று 1,621 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 3 ஆயிரத்து 46 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. இன்று மாலைக்குள் கர்நாடக அணைகளில் இருந்து கூடுலாக திறக்கப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணைக்கு முழுமையாக வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.அணையில் இருந்து காவிரியில் 14 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 500 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு உள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது.

நேற்று 76.07 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 74.99 அடியானது. இனி வரும் நாட்களில் நீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.
 

தலைப்புச்செய்திகள்