Sunday, 23rd June 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மத்திய சுகாதாரத்துறையின் கோ-வின் இணையதளத்தில் பதிவு செய்து கொண்டால், கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான மையத்தை தேர்வு செய்து கொள்ளலாம். இந்தியாவில் நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. தடுப்பூசிக்கென கோவின் என்ற பிரத்யேக இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதில் பதிவு செய்தால், அதற்கு ஏற்றபடி மக்களுக்கு தடுப்பூசி அந்தந்த மையங்களுக்கு ஒதுக்கப்படும்.
இதில் இந்தியாவைச் சேர்ந்த மக்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டினரும் கோவின் (CoWin) இணைய தளத்தில் பதிவு செய்ய அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோவின் இணையதளத்தில் பதிவு செய்ய அவர்கள், பாஸ்போர்ட்-ஐ பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்கள் பதிவு செய்த பின்னர், தடுப்பூசி செலுத்துவதற்கான வாய்ப்பை பெறலாம். இந்தியாவில் மத்திய அரசு சார்பில் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கும் அனுமதி அளித்துள்ளது.