Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மனைவியின் கள்ளக்காதலனை கொலை செய்த தொழிலாளி

ஆகஸ்டு 11, 2021 03:53

இரணியல்: கீழ முட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாண்பால் (வயது 35), மீனவர். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். மேல மணக்குடியைச் சேர்ந்தவர் சூசை மிக்கேல் (40). இவரும் மீன்பிடித்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெனி (33). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஜெனியின் பாட்டி வீடு கீழமுட்டம் பகுதியில் உள்ளது. அங்கு செல்லும்போது ஜெனிக்கும், ஜாண்பாலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

கள்ளக்காதல் விவகாரம் ஜெனியின் கணவருக்கு தெரியவந்தது. அவர் மனைவியை கண்டித்தார். இந்த நிலையில் ஜெனி, கள்ளக்காதலன் ஜாண்பாலுடன் ஓட்டம் பிடித்தார்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இரணியல் தலக்குளம் உடையார்பள்ளம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். இதுபற்றி அறிந்த சூசை மிக்கேல் நேற்றிரவு தனது மோட்டார் சைக்கிளில் உடையார்பள்ளத்திற்கு சென்றார். மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு ஜாண்பால் வீட்டிற்குள் புகுந்த சூசை மிக்கேல் அவரிடம் தகராறில் ஈடுபட்டார்.

திடீரென அரிவாளால் ஜாண்பாலை சரமாரியாக வெட்டினார். இதனை ஜெனி தடுக்க வந்தார். அவருக்கும் வெட்டு விழுந்தது. வெட்டுக்காயங்களுடன் ஜாண்பால் வீட்டை விட்டு வெளியே ஓடினார். சூசை மிக்கேல் அவரை விடாமல் துரத்திச் சென்று மீண்டும் வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் ஜாண்பால் கீழே விழுந்து இறந்தார். உடனே சூசை மிக்கேல் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் இரணியல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜெனியை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த ஜாண்பாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஜெனி இரணியல் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் சூசை மிக்கேல் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவரது மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் தலைமறைவாகி உள்ள சூசை மிக்கேலை பிடிக்க 2 தனிப்படை அமைத்துள்ளனர். தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்