![](admin/uploads/.636b4921f3b4c9.80297117.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. 6 கட்ட அகழாய்வு பணிகள் முடிவுற்ற நிலையில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக இந்தப்பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டது. அதன் பிறகு 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் 13-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
கீழடி மட்டுமின்றி அதன் அருகே உள்ள அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்ந்து நடக்கின்றன. இதில் மண் பானை, காதில் அணியும் தங்க வளையம், பகடை, நெசவுத்தொழிலில் பயன்படுத்தப்படும் தக்களி, கற்கோடாரி, மண் குவளைகள், சுடுமண் பொம்மை, கண்ணாடி பாசிகள், சங்கு வளையல்கள், வெள்ளி காசு போன்றவை கிடைத்துள்ளன. முதுமக்கள் தாழிகளும், மனித முழு உருவ எலும்பு கூடுகளும் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டன.
இந்த நிலையில் தற்போது பழங்கால மக்கள் பயன்படுத்திய பெரிய அளவிலான சிகப்பு பானை, கிடைத்துள்ளது. இந்த பானையின் கழுத்து பகுதியைச் சுற்றிலும் நுணுக்கமான வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை கிடைத்த பானைகளில் இது பெரிய அளவிலானது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பானை முழுவதும் மண் நிரப்பப்பட்டுள்ளது. அதனை சுத்தப்படுத்திய பின் தான் பானைக்குள் இருப்பது என்ன? என்பது தெரியவரும்.இதற்கான நடவடிக்கைகளில் அகழ் வாராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.