![](admin/uploads/.5d42b49624ffc4.11769229.jpg)
Wednesday, 3rd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
விருதுநகர்: விருதுநகர் குல்லூர் சந்தையைச் சேர்ந்தவர் நாகமுத்து (வயது 35). கூலி தொழிலாளி. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்த நிர்மலாதேவி (32) என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது அவர்கள் விருதுநகர் பாலவநத்தம் சாலையில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நிர்மலாதேவியை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது அண்ணன் மூர்த்தி, நாகமுத்துவை சந்தித்து கேட்டுள்ளார். இதில் அவருக்கு சரியான பதில் கிடைக்காததால் சூலக்கரை போலீசில் புகார் செய்தார். அதில் தனது தங்கை நிர்மலாதேவியை கடந்த 9-ந் தேதி முதல் காணவில்லை என்றும் அவளை கண்டுபிடித்து தருமாறும் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் நிர்மலாதேவியின் கணவர் நாகமுத்துவை தேடிச்சென்றபோது வீடு பூட்டப்பட்டு கிடந்தது. இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்து தேடினர். அப்போது அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் நாகமுத்து தனது குழந்தைகளுடன் இருப்பது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் நாகமுத்துவை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது மனைவி நிர்மலா தேவியை கொலை செய்து வீட்டின் பின்புறம் வைத்து எரித்து விட்டதாக நாகமுத்து தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.