Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதுபோதையில் சித்தியை கொலை செய்தவர் கைது

ஆகஸ்டு 15, 2021 10:48

வேலூர் அருகே மதுபோதையில் சித்தியின் தலையில் குழவிக் கல்லைப் போட்டு கொலை செய்தவரை காவல் துறையினர் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி எல்.ஜி.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (47). கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இவர், வீட்டில் இருந்து நேற்று காலை நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. அக்கம் பக்கம் வீட்டில் வசிப்பவர்கள் சந்தேகம் அடைந்து வீட்டினுள் சென்று பார்த்தனர். அப்போது, கோவிந்தம்மாள் தலையில் குழவிக்கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்துள்ளனர்.

இதுகுறித்த தகவலின்பேரில் விருதம்பட்டு காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன் விரைந்து சென்று விசாரணை செய்தார். அதில், கடந்த சில நாட்களாக கோவிந்தம்மாளின் அக்காள் மகன் சரவணன் (32) என்பவர் தங்கி இருந்தார் என்றும், அவரை காணவில்லை என்றும் தெரியவந்தது. அவரை தேடியபோது எல்.ஜி.புதூர் அருகே கட்டிட மேஸ்திரி வேலைக்கு அவர் சென்றது தெரிய வந்தது.

அவரை காவல் துறையினர் தேடிப் பிடித்து விசாரித்தனர். அதில், ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு பகுதியைச் சேர்ந்த அவர், சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் வழிப்பறி வழக்கில் கைதாகி சிறை சென்றவர் என தெரியவந்தது. சிறையில் இருந்து சில நாட்களுக்கு முன்பு வெளியில் வந்தவர் சித்தி கோவிந்தம்மாள் வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார்.

மதுபோதையில் நேற்று முன் தினம் இரவு வீட்டுக்கு வந்த அவர் சித்தியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரத்தில் அருகில் இருந்த குழவிக்கல்லை எடுத்து சித்தியின் தலையில் போட்டு கொலை செய்துவிட்டு வெளியே சென்றுள்ளார். இதையடுத்து, கோவிந்தம்மாள் கொலை வழக்கு தொடர்பாக சரவணனை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.

தலைப்புச்செய்திகள்