![](admin/uploads/.5d5530e110a685.59286085.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மேட்டூர்: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை தீவிரம் அடைந்துள்ளதால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கபினி அணையில் இருந்து 5 ஆயிரத்து 417 கன அடியும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 7 ஆயிரத்து 20 அடியும் என மொத்தம் 12 ஆயிரத்து 437 கன அடி உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல்லில் நேற்று 7 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 8 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று 6 ஆயிரத்து 553 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 7 ஆயிரத்து 474 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 6 ஆயிரம் கன அடியும், கால்வாயில் 650 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது .
அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கி உள்ளது. நேற்று 65.99 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 66.06 அடியானது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.