Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிறை கண்காணிப்பாளரை மிரட்டியதாக புகார்: சிறையில் உள்ள தீவிரவாதியிடம் போலீஸார் விசாரணை

செப்டம்பர் 01, 2021 11:19

சென்னை:சிறை கண்காணிப்பாளரை மிரட்டியதாக கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் பூந்தமல்லி கிளைச் சிறையில் உள்ள தீவிரவாதி காஜா மொய்தீனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு, தமிழகத்தில் இருந்து ஆட்களைச் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டதாக திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த காஜா மொய்தீன் என்பவரை தேசிய புலனாய்வு அமைப்பினர்(என்ஐஏ) கைது செய்தனர். சென்னை அம்பத்தூரில் இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார் கொலை வழக்கிலும் காஜா மொய்தீனுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

2015-ம் ஆண்டு கைதான காஜா மொய்தீன், பூந்தமல்லி கிளைச் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பூந்தமல்லி கிளைச் சிறை கண்காணிப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காஜா மொய்தீன் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காஜாமொய்தீன் தனக்கு மூச்சுதிணறல் இருப்பதாக கூறி வெந்நீர்பயன்படுத்த பிளாஸ்க் கேட்டுள்ளார். இதற்கு சிறை கண்காணிப்பாளர் முத்துராமன், பிளாஸ்க்வழங்குவது குறித்து உயரதிகாரிகளிடம் அனுமதி கேட்டு தகவல் தெரிவிப்பதாக கூறியுள்ளார். இதைக்கூட மேலதிகாரியிடம் கேட்கவேண்டுமா, நீ எதற்கு சிறையில் தலைமை பொறுப்பில் இருக்கிறாய், என காஜாமொய்தீன் ஒருமையில் பேசியதோடு, கேட்கும் பொருட்களை தராவிட்டால் நடப்பதே வேறு எனக்கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறை கண்காணிப்பாளர் முத்துராமன் பூந்தமல்லி காவல்நிலையத்தில் புகார்அளித்தார். புகாரின்பேரில் சிறையில் உள்ள காஜாமொய்தீனிடம் போலீஸார் விசாரணை நடத்தி, அவர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்