Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு: மாணவ-மாணவிகள் உற்சாகம்

செப்டம்பர் 01, 2021 11:35

சென்னை: கொரோனா நோய்த்தொற்று காரணமாக, கடந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டுக்கான பள்ளிகள், கல்லூரிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டன.

பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்படுகிறது. கல்லூரிகளை பொறுத்தவரையில் முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர பிற மாணவர்களுக்கு சுழற்சி முறையிலும், அதில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் அனைத்து நாட்களிலும் வகுப்புகள் நடத்தப்படுகிறது.

பள்ளிகள், கல்லூரிகள் வகுப்பறையில் 50 சதவீத மாணவர்களுடன், வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் நேற்று முழுவதும் கிருமிநாசினி திரவம் கொண்டு சுத்தம் செய்யப்பட்டன. சமூக இடைவெளியோடு வகுப்பறையில் மாணவர்கள் அமருவதற்கு ஏற்றவாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு வந்த மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதித்த பிறகே, உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும், அவ்வாறு தடுப்பூசி போட்ட ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வர கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவ-மாணவிகள் உற்சாகமாக வந்தனர். அவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர். தமிழகம் முழுவதும் இன்று 13 ஆயிரத்து 605 பள்ளிகள் திறக்கப்பட்டன.

தலைப்புச்செய்திகள்